‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 9 May 2022 10:23 PM GMT (Updated: 9 May 2022 10:23 PM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான குழி

ஈரோடு சம்பத் நகரில் உள்ள அண்ணா தியேட்டர் ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகிறார்கள். குழியில் வாகனங்கள் மோதுவதால் கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த குழியை மூட உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கோபிசெட்டிபாளையம் முத்துசா வீதியில் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் மற்றும் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் அருகே செல்லும் சாக்கடை வடிகாலில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே கழிவுநீர் அடைப்புகளை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன்ராஜ், கோபிசெட்டிபாளையம்.

ரோட்டை சீரமைக்க வேண்டும்

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள வாய்க்கால் பாலம் பஸ் நிறுத்தம் முன்பு புதிதாக பாலம் அமைக்கப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட ரோடு இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. உடனே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொதுமக்கள், வாய்க்கால் பாலம்

சாக்கடை வடிகாலில் அடைப்பு

டி.என்.பாளையம் வாணிப்புத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 13-வது வார்டில் உள்ளது எ.ஆர்.ஆர். காலனி. இங்குள்ள மின் கம்பம் பலத்த காற்றால் 2020-ம் ஆண்டு சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் மின்கம்பத்தையொட்டி உள்ள சேதம் அடைந்த சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை வடிகாலை சீரமைக்க வாணிப்புத்தூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்.அந்தோணிராஜ், டி.என்.பாளையம்.

கற்கள் அகற்றப்படுமா?

கோபி பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் அடியில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் ஒரு பகுதியில் கற்கள் குவியலாக கொட்டிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடையில் கழிவு நீர் செல்ல தடையாக உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கற்களை அகற்றி கழிவுநீர் செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும்.

பொதுமக்கள், கோபி



Next Story