சென்னை விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் கைது


சென்னை விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2022 12:26 AM GMT (Updated: 10 May 2022 12:26 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் கைது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சஜன் (வயது 50), காஞ்சீபுரத்தை சேர்ந்த சூசை ராஜா (53) ஆகிய 2 பேர் சாா்ஜாவுக்கு வேலைக்கான விசாவில் சென்று விட்டு திரும்பி வந்திருந்தனா். அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனா்.

அதில் அவா்கள், இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக 2014-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சட்டவிரோதமாக சென்று தங்கியிருந்து விட்டு திரும்பி வந்தது தெரிந்தது. 2 பேரிடமும் விசாரித்தபோது ஏமன் நாடு தடை செய்யப்பட்ட நாடு என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் தெரியாமல் போய் விட்டோம் என்று கூறினா்.

எனினும் ஏமன் நாட்டுக்கு எதற்காக சென்றனர்?. அங்கு எவ்வளவு நாட்கள் தங்கி இருந்தனா்? யாரிடம் எல்லாம் தொடர்பு கொண்டிருந்தனா்? என்றும் குடியுரிமை அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்னர் மேல் விசாரணைக்காக சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சஜன், சூசை ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story