அம்மன் கோவில்களில் திருவிழா


அம்மன் கோவில்களில் திருவிழா
x
தினத்தந்தி 10 May 2022 6:30 PM GMT (Updated: 10 May 2022 10:58 AM GMT)

மயிலாடுதுறை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

குளிச்சாறு மகா காளியம்மன் கோவில்

மயிலாடுதுறை அருகே குளிச்சாறு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பால்குடம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 15-ம் ஆண்டு பால்குட திருவிழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு குளிச்சாறு குளக்கரையில் இருந்து மஞ்சள் உடை உடுத்தி ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். 
இதையடுத்து மகா காளியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாலையூர் மகாமாரியம்மன் கோவில் 

குத்தாலம் அருகே பாலையூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இதில் காப்பு கட்டுதல், அம்மன் வீதி உலா, காவடி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதைத்தொடர்ந்து தீமிதி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். 
பின்னர் மகாமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மஞ்சள் நீர் விளையாட்டு விழா மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது‌. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Next Story