மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் லலிதா தகவல்


மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் லலிதா தகவல்
x
தினத்தந்தி 10 May 2022 6:45 PM GMT (Updated: 10 May 2022 11:12 AM GMT)

மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறிருப்பதாவது:- 

வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி வருகிற 13.5.2022, 20.5.2022 மற்றும் 27.5.2022 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப் வளாகத்தில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மற்றும் யூனியன் கிளப் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

சான்றிதழ் நகல்கள்

இந்த முகாமில் மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. மேலும் முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள், பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுனர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story