புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 May 2022 4:19 PM GMT (Updated: 10 May 2022 4:19 PM GMT)

புகார் பெட்டி

விபத்து அபாயம்
திக்கணங்கோடில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் பல இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால், கருக்குப்பனை முதல் திக்கணங்கோடு வரை சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                                 -எட்வின், மத்திகோடு.

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்
திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் சித்திரவிளையில் இருந்து கல்லாம்பொற்றை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே மின்கம்பமும், பனைமரமும் நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மின் கம்பத்தை அகற்றி சாலையோரத்திலும், மரத்தை வேருடன் மாற்று இடத்தில் நடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                    -ஆர்.ஜெகன், சித்திரவிளை.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட  ஊட்டுவாழ்மடத்தில் சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?. 
                                                                      -டி.சேகர், ஊட்டுவாழ்மடம். 
வீணாகும் குடிநீர்
மறவன்குடியிருப்பில் இருந்து ஈத்தாமொழி செல்லும் சாலையில் ஒரு பர்னிச்சர் கடை உள்ளது. இதன் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள குழாயின் வால்வு சேதமடைந்து குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயின் வால்வை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
                                       -மைக்கேல் சிகாமணி, மறவன்குடியிருப்பு.
பாதசாரிகள் அவதி
தக்கலையில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன் உள்ள சாலையோரத்தில் பல நாட்களாக ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகள் அந்த பகுதியில் வரும்போது, சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், வேகமாக வரும் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரத்தில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள லாரியை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                              -சிவனிசதீஷ், தக்கலை.
பஸ் வசதி தேவை
மார்த்தாண்டத்தில் இருந்து பாரதப்பள்ளிக்கு காலை 7 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால், வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் இந்த பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவ-மாணவிகள் நலன் கருதி பஸ்சை முறையாக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                   -எட்வர்ட் ஜின், பாரதப்பள்ளி.



Next Story