கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் முத்தமிழ் விழா-திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு


கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் முத்தமிழ் விழா-திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 10 May 2022 5:50 PM GMT (Updated: 10 May 2022 5:50 PM GMT)

கவிஞர் ராமலிங்கம் கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்தது. இதில் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்றார்.

நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் முத்தமிழ் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பாரதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் விஜயராணி வரவேற்றார். நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்திய நாட்டை பொறுத்த வரை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்தி ஆட்சி மொழி என்பதை போல், ஆங்கிலமும் ஆட்சி மொழி என்பதை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இந்தி என்பது இந்த நாட்டில் இருக்கின்ற பல்வேறு மொழிகளில் ஒன்று. அது ஒன்றினை மட்டுமே மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.
ஆங்கிலத்தை அகற்றி விட்டு, இந்தி மட்டுமே என்ற நிலையை மத்திய அரசோ, வேறு அமைப்போ மேற்கொள்ளுமானால் அதனை எல்லா வகையிலும் போராடி தடுத்து நிறுத்தி ஆங்கிலம் தொடர்ந்திடுவதற்கான எல்லா முயற்சிகளையும் தி.மு.க. எடுக்கும் என்றார். பின்னர் பா.ஜ.க.வில் அவரது மகன் இணைந்தது குறித்த கேள்விக்கு, பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.

Next Story