ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2022 5:53 PM GMT (Updated: 10 May 2022 5:53 PM GMT)

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதுக்கோட்டையில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் துர்கா தேவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை பொதுக்குழு உறுப்பினர் சரவணன் தொடங்கி வைத்து பேசினார். வட்டார செயலாளர் சண்முகபிரியா கோரிக்கைகள் குறித்து பேசினார். தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இயலாது என நிதியமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆவுடையார்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார கிளையின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜா மான் சிங் வாழ்த்துரை வழங்கினார். வட்டார செயலாளர் சண்முகசுந்தரம் கோரிக்கையை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் கண்ணதாசன் நன்றி கூறினார். 
பொன்னமராவதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வட்டார தலைவர் பழனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொறுப்பாளர் தேவேந்திரன், மாவட்ட பொருளாளர் புவியரசு ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story