பள்ளி மாணவியை கடத்தி திருமணம்: தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி மாணவியை கடத்தி திருமணம்: தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 May 2022 5:53 PM GMT (Updated: 10 May 2022 5:53 PM GMT)

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்து கொண்டது தொடர்பாக போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தர்மபுரி:
பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்து கொண்டது தொடர்பாக போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மாணவி கடத்தல்
தர்மபுரி மாவட்டம் இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார் (வயது 25). தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று மஞ்சவாடி கணவாய் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவியை மீட்டனர். மாணவியை கடத்தி இளம் வயது திருமணம் செய்தது தொடர்பாக அஜீத்குமாரை கைது செய்தனர்.
13 ஆண்டு சிறை
இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் முடிவில் அஜீத்குமார் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து அஜீத்குமாருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்க்கதுல்லா நேற்று தீர்ப்பு அளித்தார்.

Next Story