தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 10 May 2022 6:42 PM GMT (Updated: 10 May 2022 6:42 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மகாராஜபுரம், தம்பிபட்டி ஆகிய கிராமங்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஏராளமானோர் படிக்க, பணி நிமித்தம் செல்கின்றனர். இந்நிலையில் இந்த வழிதடத்தில் குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறன. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நேர தாமதத்தால் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கிராமங்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
பொதுமக்கள், மகாராஜபுரம்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
மதுரை மாவட்டம் கே.புதூர் காந்திபுரம் வழி பாண்டியன் நகர் 1-வது தெருவில் சுமார் 250 குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரானது நிரம்பி சாலைகளில் வழிந்ேதாடுகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள், விஷபூச்சிகள் அதிக அளவில் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் நிைல உள்ளது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்றுவதுடன், அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
கார்த்திக், கே.புதூர்.
தெருவிளக்கு ஒளிருமா?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சவ்வாஸ்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சிலநாட்களாக எரிவதில்லை. எரியாத தெருவிளக்குகளால் இரவுநேரங்களில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. மேலும் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள் முடங்கும் நிலை நிலவுகிறது. இதனால் பலவகைகளில் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து  ஒளிராத தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி புதிய விளக்குகள் பொருத்த வேண்டும்.
தர்மராஜ், அருப்புக்கோட்டை.  
வேகத்தடை வேண்டும்
மதுரை மாவட்டம் பழங்காநத்தம்-காளவாசல் மெயின் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த சாலையில் காலை மற்றும் மாலைநேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால் வாகனங்கள் வேகமாக இயங்கி சாலைகளில் சென்று வருகிறது. அடிக்கடி இப்பகுதியில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும்.
ரஞ்சித், காளவாசல்.

Next Story