போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 7:05 PM GMT (Updated: 10 May 2022 7:05 PM GMT)

காவலர் பள்ளியில் பயிற்சி பெற்று வந்த போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலாஜா

காவலர் பள்ளியில் பயிற்சி பெற்று வந்த போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பயிற்சி பள்ளி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 26) கடந்த மார்ச் மாதத்தில் காவலர் பணிக்கு தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் காஞ்சீபுரத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை சரியில்லை என விக்னேஷ்வரன் கடந்த 2-ந்் தேதி முதல் வரும் 12-ந்் தேதி வரை 10 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சாத்தூர் வந்துள்ளார். நேற்று வீட்டில் பெற்றோரிடம் காஞ்சீபுரம் சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். 

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று இரவு விக்னேஷ்வரன் வாலாஜா சுங்கச்சாவடியில் இருந்து அவரது தந்தை ஏழுமலைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ பிடிக்கவில்லை. உடல்நிலை சரியில்லை என கூறிவிட்டு ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டார்.இதனைதொடர்ந்து ஏழுமலை தனது உறவினர்கள் நண்பர்களை அழைத்துக்கொண்டு வாலாஜா டோல்கேட் பகுதிக்கு சென்று விக்னேஷ்வரனை தேடினார். ஆனால் அவரை பற்றிய தகவல் கிடைக்காததால் அது குறித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் ஏழுமலை புகார் அளித்தார். 

இந்த நிலையில் நேற்று காலை வாலாஜா டோல்கேட் அருகே வி.ஐ.பி. சிட்டி கார்டன் பகுதியில் புங்கை மரத்தில் வேட்டியால் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாலாஜா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வாலாஜா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் விக்னேஷ்வரன் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வாலாஜா காவல் ஆய்வாளர் காண்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story