தொழிலாளியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி


தொழிலாளியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 May 2022 7:11 PM GMT (Updated: 10 May 2022 7:11 PM GMT)

நாகை அருகே கடன் வழங்குவதாக கூறி தொழிலாளியிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

வெளிப்பாளையம்:
நாகையை அடுத்த சங்கமங்கலம், பழையனூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மயில்வாகனன் (வயது50). விவசாய தொழிலாளி. இவரின் செல்போனில் கடந்த மாதம் (ஏப்ரல்) 17-ந்தேதி பேசிய ஒரு பெண் தான் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், உங்களுக்கு ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் கடன் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கு நீங்கள் முன்பணம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். இது உண்மை என்று நம்பிய மயில்வாகனன், அந்த பெண் கூறிய வங்கி கணக்கு 5 தவணைகளாக ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார்.பின்னர், அந்த பெண்ணின் செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர்,  நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story