தஞ்சையில், ஆடிட்டர் வெட்டிக்கொலை


தஞ்சையில், ஆடிட்டர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 10 May 2022 7:56 PM GMT (Updated: 10 May 2022 7:56 PM GMT)

தஞ்சையில், ஆடிட்டர் வெட்டிக்கொலை

தஞ்சாவூர்
தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 45). ஆடிட்டர். இவருடைய அலுவலகம் கொண்டிராஜபாளையத்தில் உள்ளது. 
மகேஸ்வரன் தன்னுடைய வீட்டுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் பண்ணை வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.
ஏலம் எடுப்பதில் முன்விரோதம் 
இந்த பண்ணைக்கு எதிரில் மாநகராட்சி குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதை ஆடிட்டர் மகேஸ்வரன் சமீபத்தில்தான் ஏலத்திற்கு எடுத்துள்ளார். இந்த ஏலம் விவகாரத்தில் மகேஸ்வரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
சரமாரி வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று இரவு தனது பண்ணையில் மகேஸ்வரன் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் வந்தது. 
அந்த கும்பல் திடீரென பண்ணைக்குள் புகுந்தது. பின்னர் அவர்கள்  மகேஸ்வரன் சுதாரிப்பதற்குள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தப்பிச்சென்றனர்
அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சாவகாசமாக தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. மகேஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. 
இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மகேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மகேஸ்வரனின் மனைவி நிஷா கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story