வீடு புகுந்து விவசாயி வெட்டிக் கொலை; 9 பேர் கைது


வீடு புகுந்து விவசாயி வெட்டிக் கொலை; 9 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2022 8:20 PM GMT (Updated: 10 May 2022 8:20 PM GMT)

தங்கவயல் அருகே வீடு புகுந்து விவசாயியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலார் தங்கவயல்:

விவசாயி வெட்டிக் கொலை

  கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா கேசம்பள்ளி அருகே பீரனகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர் நாராயணப்பா (வயது 50). விவசாயி. இவருக்கும் இதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணாரெட்டி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணாரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் நாராயணப்பாவின் வீட்டுக்கு அரிவாள்களுடன் சென்றனர். பின்னர் அவர்கள் நாராயணப்பாவை அரிவாள்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாராயணப்பாவின் மனைவி, அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அவரையும் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் நாராயணப்பா சம்பவ இடத்திேலயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி பலத்த காயமடைந்தார். இதையடுத்து கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

முன்விரோதம் காரணமாக...

  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்த நாராயணப்பாவின் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர், கேசம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான நாராயணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக கிருஷ்ணாரெட்டி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடு புகுந்து நாராயணப்பாவை அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது.

9 பேர் கைது

  இதுகுறித்து கேசம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 8 பேர் என மொத்தம் 9 பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் 9 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story