திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்-வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்; ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஈரோடு மகளிர் கோர்ட்டு உத்தரவு


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்-வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்; ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஈரோடு மகளிர் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 May 2022 8:47 PM GMT (Updated: 10 May 2022 8:47 PM GMT)

பவானி அருகே வாலிபர் ஒருவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டு ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு
பவானி அருகே வாலிபர் ஒருவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டு ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இளம்பெண்ணுடன் காதல்
பவானி அருகே உள்ள ஒரிச்சேரி புதூர் மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் மோகனசுந்தரம் (வயது 31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அவருக்கு நன்கு அறிமுகமான பட்டதாரி பெண் ஒருவருக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கிக்கொடுத்தார். இதனால் அந்த பெண்ணுடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே மோகனசுந்தரம் அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி உள்ளார்.
ஆனால் இளம்பெண் அவருடைய வீட்டில் காதலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி மறுத்தார். எனவே மோகனசுந்தரம், நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி அளித்தார். அவரது பேச்சில் மயங்கிய இளம்பெண்ணும், அவரை காதலிப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து மோகனசுந்தரம் இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச்சென்றார். கோவில், பூங்கா என்று 2 பேரும் சென்று வந்தனர்.
பாலியல் பலாத்காரம்
இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி மோகனசுந்தரத்தின் வீட்டில் யாரும் இல்லாதபோது, இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்தார். அங்கு வைத்து, இளம்பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ள முயன்றபோது, அவர் தடுத்தார். ஆனால், உன்னை நான் தான் திருமணம் செய்யப்போகிறேன் என்று கூறி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகும் அவர்களின் காதல் தொடர்ந்தது.
பின்னர் கடந்த 9-3-2020 அன்று எங்காவது வெளியில் செல்லலாம் என்று கூறி மோகனசுந்தரம், இளம்பெண்ணை  கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு, திருமணம் செய்வதாக கூறி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால், இளம்பெண்ணை திருமணம் செய்ய முன்வரவில்லை. அப்போது இளம்பெண்ணுக்கு அவர் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவது புரிந்தது.
வழக்கு பதிவு
ஒவ்வொரு முறையும் பாலியல் உறவுக்காக மோகனசுந்தரம் திட்டம் தீட்டி ஏமாற்றியது தெரிந்தது. குறிப்பாக, வெளியூர் செல்வதாக கூறிவிட்டு, இளம்பெண்ணுக்கே தெரியாமல் ஆன்லைன் மூலம் விடுதியில் அறை முன்பதிவு செய்து திட்டமிட்டு அழைத்துச்சென்றதால், இளம்பெண் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்கு பதிவு செய்து மோகனசுந்தரத்தை கைது செய்தார். இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
7 ஆண்டு ஜெயில்
வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்துக்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், திருமணம் செய்வதாக ஏமாற்றிய குற்றத்துக்காக 3 மாதம் ஜெயில் ரூ.1000 அபராதம், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் நஷ்ட ஈடாக மோகனசுந்தரம் வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி ஆர்.மாலதி கூறி இருந்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.

Next Story