பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேச்சு


பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 10 May 2022 10:09 PM GMT (Updated: 10 May 2022 10:09 PM GMT)

பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் கூறினார்.

சேலம், 
தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை காலங்களில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்கு தேவையான பொக்லைன் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாக்கடை கால்வாய்கள், நீர்வழித்தடங்களை தூர்வாருதல், ஏரி, குளங்களில் மழைக்காலங்களில் வெளியேறும் உபரிநீர் குடியிருப்புகளில் செல்லாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றிணைந்து பணியாற்ற...
சுகாதார மையங்களில் மருந்து, மாத்திரைகள் இருப்பு வைத்து கொள்ள வேண்டும். தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டும். ஓடைகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்ய வேண்டும். எனவே அனைத்து துறை அலுவலர்களும் எதிர்வரும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் துணைமேயர் சாரதாதேவி, மண்டல தலைவர்கள் கலையமுதன், உமாராணி, தனசேகர், அசோகன், நிலைக்குழுத்தலைவர்கள் ஜெயகுமார், குமரவேல், சாந்தமூர்த்தி, மஞ்சுளா, சரவணன், முருகன், நியமனக்குழு உறுப்பினர் தமிழரசன் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story