வெள்ளி பட்டறையில் 3 பேர் கொலை: 2 பேர் அதிரடி கைது


வெள்ளி பட்டறையில் 3 பேர் கொலை: 2 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 10 May 2022 10:09 PM GMT (Updated: 10 May 2022 10:09 PM GMT)

வெள்ளி பட்டறையில் 3 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூரமங்கலம், 
3 பேர் கொலை
சேலம் இரும்பாலை அருகே பெருமாம்பட்டியை சேர்ந்த வெள்ளி தொழில் அதிபர் தங்கராஜ். இவரது பட்டறையில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த வினோத் என்பவர் வேலை செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு சென்ற வினோத் சில நாட்கள் கழித்து மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வேலைக்கு வந்தார்.
அப்போது தன்னுடைய நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்ததாக தெரிகிறது. மேலும் வெள்ளி பட்டறையில் இரவில் தங்கி உள்ளனர். அப்போது அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டதாக தெரிகிறது. இதனை அதே பட்டறையில் வேலை பார்த்து வரும் வந்தனகுமாரி என்பவருக்கு தெரிய வந்தது. அவர், இதனை தன்னுடைய கணவர் ஆகாஷிடம் கூறியுள்ளார்.
2 பேர் கைது
இதனை அறிந்த வினோத் தரப்பினர், தமது கொள்ளை திட்டம் அரங்கேற முடியாமல் போய் விடும் என நினைத்து வந்தனகுமாரி, அவருடைய கணவர் ஆகாஷ், உறவுக்கார 15 வயது சிறுவன் சன்னிகுமார் ஆகியோரை கொலை செய்து விட்டு வினோத் உள்ளிட்டவர்கள் தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். வினோத், அவருடைய கூட்டாளிகள் அஜய்குசவா, சுராஜ் ஆகிய 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரிகான், தினேஷ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். தற்போது தனிப்படை போலீசார் உத்தரபிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த தினேஷ், ரிகான் ஆகியோரை போலீசார் கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.

Next Story