தனியார் சிமெண்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தனியார் சிமெண்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 12:57 AM GMT (Updated: 11 May 2022 12:57 AM GMT)

தனியார் சிமெண்டு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த ரெட்டிபாளையத்தில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் தேசிய தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தீபாவளி போனசை உயர்த்தி வழங்க வேண்டும், ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஆலையின் உற்பத்தி பிரிவில் காலியாக உள்ள இடங்களில் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வருடாந்திர மருத்துவக் காப்பீட்டு தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆலையில் உள்ள சிற்றுண்டிகளில் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை, ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தொழிலாளர் யூனியன் சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதையடுத்து ஆலை நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்படாததால், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் தேசிய தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று ஆலையின் உள்ளே கருப்பு பட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story