இந்திய அணியில் தேர்வான அரியலூர் வீரர்


இந்திய அணியில் தேர்வான அரியலூர் வீரர்
x
தினத்தந்தி 11 May 2022 1:26 AM GMT (Updated: 11 May 2022 1:26 AM GMT)

ஆக்கி போட்டிக்கான இந்திய அணியில் அரியலூர் வீரர் தேர்வாகியுள்ளார்.

தாமரைக்குளம்:

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்
அரியலூர் நகரை சேர்ந்தவர் கார்த்தி(வயது 21). ஆக்கி விளையாட்டு வீரரான இவர் ஆசிய கோப்பைக்கான ஆக்கி போட்டியில் விளையாட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவருடைய தந்தை செல்வம் வங்கியில் இரவு நேர காவலராக பணியாற்றி, தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலராக பணியாற்றி வருகிறார். தாய் வளர்மதி வீடுகளில் பாத்திரம் தேய்த்து, வீட்டு வேலை செய்து கார்திக்கை படிக்க வைத்துள்ளார்.
கார்த்தி 7-ம் வகுப்பு வரை அரியலூரில் உள்ள தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்துள்ளார். அப்போது அவருக்கு விளையாட்டில் இருந்த ஆர்வத்தை பார்த்த அவரது உறவினர் ஒருவர், அவரை சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை அங்கு சேர்த்துள்ளனர். அங்கு கார்த்தி 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்தார். கார்த்திக்கின் விளையாட்டு திறனை பார்த்த, திருச்சியை சேர்ந்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர், கார்த்தியை அழைத்து அவரது விளையாட்டு திறனை மேம்படுத்தியுள்ளார். பள்ளிப்பருவத்தில் 14 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆக்கி போட்டியில் பங்கேற்றார்.
இந்திய அணியில் தேர்வு
பின்னர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை வரலாறு பயின்ற கார்த்தி, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்றார். மேலும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான ஆக்கி போட்டி, சீனியர் நேஷனல், ஜூனியர் அசிஸ்டன்ட் ஆல் இந்தியா யுனிவர்சிட்டி போட்டிகளிலும் பங்கேற்றார். அவரது விளையாட்டு திறனால் பெங்களூரு சாய் விளையாட்டு மையத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். ேமலும் எக்சலன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு பல போட்டியில் பங்கேற்றார்.
தற்போது இந்தோனேஷியாவில் நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணியில் முன்கள ஆட்டக்காரராக விளையாட‌ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்தி விடாமுயற்சி மற்றும் விளையாட்டு திறனால் ஏழ்மையை வென்று இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது அரியலூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story