மது குடிக்க பணம் தராத மனைவியை கத்தியால் குத்திய கணவன்- ஆயுள் தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 11 May 2022 1:56 PM GMT (Updated: 11 May 2022 1:56 PM GMT)

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை, கத்தியால் குத்தி கொல்ல முயன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மும்பை, 
  மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை, கத்தியால் குத்தி கொல்ல முயன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மனைவி மீது தாக்குதல்
  மும்பையை சேர்ந்தவர் சந்திரகாந்த்(வயது 45). இவருக்கு மங்களா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சந்திரகாந்த்திற்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மனைவியை மிரட்டி மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் அடிக்கடி அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. 
  கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி காலை 8.30 மணி அளவில் கவுதம்நகர் அருகே மங்களா நடந்து வந்தார். அப்போது வழி மறித்த அவரது கணவர் சந்திரகாந்த் பணம் தருமாறு தகராறு செய்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த மங்களாவை கத்தியால் தலை, கழுத்து மற்றும் கன்னத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
ஆயுள் தண்டனை
  இதனால் வலி தாங்க முடியாமல் மங்களா அலறி துடித்து சத்தம் போட்டதால், அவரது மகள் உள்பட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் மங்களா உயிர் பிழைத்தார். இச்சம்பவம் குறித்து அவர் தேவ்னார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் சந்திரகாந்த் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
  இதுதொடர்பாக செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 7 பேர் சந்திரகாந்திற்கு எதிராக சாட்சியம் அளித்தனர். இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனைத்தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
-----

Next Story