கோவில்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்-அரசு பஸ் மோதல்;வாலிபர் பலி


கோவில்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்-அரசு பஸ் மோதல்;வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 May 2022 2:21 PM GMT (Updated: 11 May 2022 2:21 PM GMT)

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே, அரசு பஸ்- மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
வாலிபர்
கோவில்பட்டியை அடுத்துள்ள மந்தித்தோப்பு அரண்மனை தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் கார்த்திக் ராஜ் (வயது 28). தொழிலாளி.
இவர் தனது நண்பர் மந்தித்தோப்பு பத்திர காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் விஜிராஜ் (23) என்பவருடன் நேற்று செமப்புதூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை விஜிராஜ் ஓட்டினார். 
விபத்து
விஜயாபுரி கிராம பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது கோவில்பட்டியில் இருந்து லக்கம்மாள்புரம் சென்ற அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. அதில் இருந்த கார்த்திக் ராஜ்,   விஜிராஜ்   ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவு
அங்கு கார்த்திக்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விஜிராஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் கொப்பம் பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் ராமராஜ் (35) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story