மத்திய அரசின் அலட்சியத்தால் காவிரியில் நமது பங்கை பெற முடியவில்லை; தேவேகவுடா வேதனை


மத்திய அரசின் அலட்சியத்தால் காவிரியில் நமது பங்கை பெற முடியவில்லை; தேவேகவுடா வேதனை
x
தினத்தந்தி 11 May 2022 3:03 PM GMT (Updated: 11 May 2022 3:03 PM GMT)

மத்திய அரசின் அலட்சியத்தால் காவிரியில் நமது பங்கை பெற முடியவில்லை என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு:

தண்ணீர் பிரச்சினை

  ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஜலதாரே பொதுக்கூட்டம் பெங்களூரு பசவனகுடியில்  நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-

  நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் மத்திய அரசின் அலட்சியத்தால் காவிரியில் நமது பங்கு நீரை பெற முடியவில்லை. எதிர்காலத்தில் பெங்களூரு நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவது கடினமானதாக மாறும்.

  இந்த பிரச்சினைக்கு இப்போதே தீர்வு காணாவிட்டால் தண்ணீர் பிரச்சினை ஏற்படும். நகரின் பல்வேறு பகுதிகளில் டேங்கர்கள் மூலம் நீரை பெற்று பயன்படுத்துகிறார்கள். நகரின் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி நீர் வழங்க முடியவில்லை.

மேற்கூரை சேதம்

  ஜனதா தளம்(எஸ்) ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்களால் பெங்களூரு இன்று வளர்ந்துள்ளது. பெங்களூருவில் பெய்த மழைக்கு பொம்மனஹள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. அந்த அளவுக்கு தரமற்ற முறையில் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஜனதா ஜலதாரே ரத யாத்திரையை நாங்கள் தொடங்கி நடத்தி வருகிறோம். கர்நாடகத்தில் ஓடும் நதிகளின் நீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கம். நமது நதிகளின் நீரை பயன்படுத்த நமக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
  இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

Next Story