வீடு புகுந்து 3 பவுன் சங்கிலி திருட்டு


வீடு புகுந்து 3 பவுன் சங்கிலி திருட்டு
x
தினத்தந்தி 11 May 2022 4:17 PM GMT (Updated: 11 May 2022 4:17 PM GMT)

வீடு புகுந்து 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது. திருட வந்த இடத்தில் செல்போனை தவற விட்ட மர்மநபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

வெண்ணந்தூர்:
வீடு புகுந்து 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது. திருட வந்த இடத்தில் செல்போனை தவற விட்ட மர்மநபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
3 பவுன் சங்கிலி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர்அருகே ஆலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54). தறி தொழிலாளி. இவருடைய மனைவி அன்பு (51). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. இதனால் கணவன்- மனைவி இருவர் மட்டும் ஆலம்பட்டி பகுதியில் வசித்து வந்தனர்.இரவு நேரம் புழுக்கம் அதிகமாக இருந்ததால் அன்பு வீட்டுக்கு வெளியே தூங்கினார்.
அப்போது தான் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி வீட்டுக்குள் வைத்து விட்டு தூங்கினார். அதிகாலை நேரம் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர், அன்பு கழற்றி வைத்த 3 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டார். திருட வந்த இடத்தில் மர்மநபர் தனது செல்போனை தவற விட்டார். பின்னர் அவசரத்தில் தவற விட்ட தனது செல்போனுக்கு பதில் வீட்டில் இருந்த மற்றொரு செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். காலையில் விழித்து எழுந்த அன்பு தனது நகையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்மநபர் குறித்து விசாரணை
மேலும் வீட்டில் தங்களது செல்போனுக்கு பதில் வேறு ஒரு செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் யாரோ மர்மநபர், வீட்டுக்குள் நுழைந்து 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மர்மநபர் தவற விட்டு சென்ற செல்போனை கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதாவது, அந்த செல்போன் திருட வந்தவருக்கு சொந்தமானதா? இல்லை, அந்த செல்போனும் எங்காவது திருடியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story