அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 4:18 PM GMT (Updated: 11 May 2022 4:18 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது.

நாமக்கல்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
கோரிக்கைகள்
இதில் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராமு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை தலைவர் அத்தியப்பன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் மலர்க்கண்ணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொருளாளர் முருக.செல்வராசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்.
இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் செல்வகுமார், செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அருள்செல்வன் நன்றி கூறினார்.

Next Story