அரசு மற்றும் தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வழியாக செல்ல வேண்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை


அரசு மற்றும் தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வழியாக செல்ல வேண்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 May 2022 4:38 PM GMT (Updated: 11 May 2022 4:38 PM GMT)

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வழியாக செல்ல வேண்டும் என டிரைவர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிதம்பரம், 

கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை, பி. முட்லூர் மெயின் ரோடு வழியாக சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு செல்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை கிராமத்துக்குள் செல்லாமல் நேரடியாக சிதம்பரத்துக்கு சென்று வந்தன. இதனால் பரங்கிப்பேட்டை பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும்சிரமப்பட்டனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துணை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா தலைமையில், போக்குவரத்து போலீசார் நேற்று புதுச்சத்திரம் மெயின் ரோட்டில் நின்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பரங்கிப்பட்டை வழியாக செல்லாத அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் கடலூர்-சிதம்பரம் இடையே செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் பரங்கிப்பேட்டைக்கு சென்று பயணிகளை ஏற்றிய பின்னர் பி.முட்லூர், புவனகிரி வழியாக சிதம்பரத்துக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினர்.

Next Story