மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி


மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 11 May 2022 5:31 PM GMT (Updated: 11 May 2022 5:31 PM GMT)

ஜோலார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 300 பேர் கலந்துகொண்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 300 பேர் கலந்துகொண்டனர்.

விளையாட்டு போட்டி

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) பெரியகருப்பன் தலைமை தாங்கினார். 

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி இனியன், நகராட்சி ஆணையாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பத்தூர் வருவாய் கோட்ட அலுவலர் லட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

300 பேர் பங்கேற்பு

மாவட்டம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் கைகால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போன்றவை நடைபெற்றது. முற்றிலும் பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், மிக குறைந்த பார்வையற்றோருக்கு நின்றநிலை தாண்டுதல், ஷாப்ட் பால் எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. 

மூளை நரம்பு பாதித்தவர்களுக்கு நின்றநிலை தாண்டுதல்,  காதுகேளாதோருக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. 
போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை திருப்பத்தூர் வருவாய் கோட்ட அலுவலர் லட்சுமி வழங்கினார். ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர் காவியா விக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story