8 டன் ரேஷன் அரிசி லாரிகளுடன் பறிமுதல்


8 டன் ரேஷன் அரிசி லாரிகளுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2022 6:13 PM GMT (Updated: 11 May 2022 6:13 PM GMT)

அரக்கோணம் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

அரக்கோணம்

அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேலூர் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் மோகன் உள்ளிட்ட குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று அரக்கோணம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அம்மனூர் ஏரிக்கரை அருகே போலீசார் சென்ற போது புதர் மண்டியிருந்த பகுதியில் ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு சிலர் ரேஷன் அரிசியை மாற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

இதனையடுத்து போலீசார் 180 மூட்டை கொண்ட சுமார் 8 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story