விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது


விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியது
x
தினத்தந்தி 11 May 2022 8:18 PM GMT (Updated: 11 May 2022 8:18 PM GMT)

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலம் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

திருச்சி, மே.12-
திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலம் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அரிஸ்டோ மேம்பாலம்
மிகவும் பழமையான, அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி (அரிஸ்டோ மேம்பாலம்) கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.
ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதில் முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளன.
ராணுவம் இடம்தர மறுப்பு
சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த இடத்தை கொடுக்க ராணுவ அமைச்சகம் மாற்று இடம் கேட்டது. ஆனால், ராணுவ அமைச்சகம் கேட்ட இடத்தில், மாற்று நிலம் ஒதுக்க தமிழக அரசு கொடுக்க தயங்கி வந்தது. எனவே, ராணுவ இடம் ஒப்படைக்கப்படாததால் அந்த பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணி இன்னும் நிறைவடையாமல், அந்தரத்தில் தொங்கியபடி பாலம் பல ஆண்டுகளாக கிடந்தது.
அதே வேளையில் முதல்கட்ட பணியில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள ஒரு பகுதியை அப்போது தமிழக முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வாகனங்கள் செல்ல அனுமதி
இதனைத்தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்ல தொடங்கின. இந்த பாலத்தில், மதுரை சாலையில் கிராப்பட்டி பகுதியில் இருந்து வாகனங்கள் ஏறி, இறங்கவும், மத்திய பஸ் நிலையம், திண்டுக்கல் சாலை கருமண்டபம் ஆகிய வழிகளில் ஏறி, இறங்கவும் முடியும். அதே வேளையில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழித்தடத்தில் வாகனங்கள் இறங்க மட்டுமே முடியும். ஜங்ஷன் பகுதியில் இருந்து ஏற முடியாது. இந்தநிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தினை கொடுக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி தற்போது பணிகள் தொடங்குவதற்கானநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்ன. சமீபத்தில் திருச்சி வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு,விரைவில் விடுபட்ட பாலப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார்.
பூமி பூஜையுடன் தொடங்கியது
இந்த நிலையில் அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலம் கட்டுவதற்கான பணிகள் நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் நின்றிருந்த மரங்கள் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களால் நேற்று வெட்டி அகற்றி அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து திருச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சத்தியன் (திட்டம்) கூறுகையில், `அரிஸ்டோ மேம்பாலத்தில் விடுபட்ட பாலப்பணிகள் தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டது.தற்போது பாலம் அமைய உள்ள இடத்தில் நின்ற மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அடுத்து தடுப்பு சுவரும் அகற்றப்படும். விடுபட்ட பாலம் கட்டுவதற்காக ரூ.3½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பாலம் 135 மீட்டர் நீளத்திற்கும், 10½ மீட்டர் அகலத்திற்கும்கட்டப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை முதல் பாலம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கி இடைவிடாது நடைபெறும். 3 மாதங்களில் பணிகள் முடித்து அவைபோக்குவரத்துபயன்பாட்டிற்கு வந்துவிடும்' என்றார்.

Next Story