நூல் கொள்முதல் செய்து ரூ.8¾ லட்சம் மோசடி: 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழில் அதிபர் கைது


நூல் கொள்முதல் செய்து ரூ.8¾ லட்சம் மோசடி: 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 9:09 PM GMT (Updated: 11 May 2022 9:09 PM GMT)

நூல் கொள்முதல் செய்து ரூ.8¾ லட்சம் மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தார்கள்.

ஈரோடு
நூல் கொள்முதல் செய்து ரூ.8¾ லட்சம் மோசடி செய்த வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தார்கள். 
நூல் கொள்முதல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். ஸ்பின்னிங் மில் மேலாளர். இவரிடம் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த சென்னிமலையில் டெக்ஸ்டைல் நடத்தி வரும் குழந்தைவேல் என்கிற பழனியப்பன் (வயது 51), கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்திற்கு நூல் கொள்முதல் செய்துள்ளார்.
இதனை குழந்தைவேல் பெற்றுக்கொண்டு, ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்துக்கு காசோலை வழங்கியுள்ளார். ஆனால், வங்கியில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்து விட்டது. அதனால் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர், குழந்தைவேல் என்கிற பழனியப்பனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவு
இதைத்தொடர்ந்து ஸ்பின்னிங் மில் மேலாளர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதில், குழந்தைவேல் என்கிற பழனிசாமி, எங்களிடம் நூல் கொள்முதல் செய்து, எங்களை திட்டமிட்டே பணம் இல்லாத காசோலையை கொடுத்து ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அவருக்கு உடந்தையாக வெங்கடபதி, சாகுல் அமீது ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் தலைமறைவாகினர். 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்திட கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி ஈரோடு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
கைது
அதன் பேரில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பேரையும் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குழந்தைவேல் என்கிற பழனியப்பனை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதேபோல் மோசடி வழக்கு ஒன்றில் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி போலீசார், குழந்தைவேல் என்கிற பழனியப்பனை 7 ஆண்டுகளாக தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story