மருமகன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மாமனார்


மருமகன் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மாமனார்
x
தினத்தந்தி 11 May 2022 9:09 PM GMT (Updated: 11 May 2022 9:09 PM GMT)

குடிபோதையில் தகராறு செய்ததால் தலையில் கல்லைப்போட்டு தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த அவரது மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொள்ளேகால்:

குடும்ப தகராறு

  சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஜாகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹயா. இவரது மகள் ஜான்சி. இவருக்கும் அதே கிராமத்ைத சேர்ந்த அந்தோணி (வயது 25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்தோணி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

  இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான்சி, கணவரிடம் கோபித்து கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கொலை

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்தோணி, மது அருந்திவிட்டு மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்புமாறு மாமனார் ஹயாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தோணி, ஹயா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  இதனால் ஆத்திரமடைந்த ஹயா, அந்தோணியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராத ஹயா, ஒரு ெபரிய கல்லை எடுத்து அந்தோணி தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தோணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாமனார் கைது

  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளேகால் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான அந்தோணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மகளுடன் தகராறு செய்ததுடன் மது போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததால் மருமகன் அந்தோணியை ஹயா, தலையில் கல்லைப்போட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹயாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story