திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 May 2022 9:52 PM GMT (Updated: 11 May 2022 9:52 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு
அறச்சலூர் அருகே உள்ள 60 வேலம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் ஏசுராஜ். இவருடைய மகன் கவின் (வயது 22). இவர் அதே பகுதியில் தேங்காய் உரிக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், 15 வயதுடைய 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் கவினை வரவழைத்து கண்டித்ததுடன், எச்சரிக்கை செய்தும் அனுப்பினார்கள்.
இந்த நிலையில் அந்த மாணவி கடந்த 7-ந் தேதி பள்ளிக்கூடத்துக்கு சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அறச்சலூர் போலீசில், தனது மகளை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை கவின் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவினை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story