கோர்ட்டு வளாகத்தில் கைதிகளிடம் கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபர் கைது


கோர்ட்டு வளாகத்தில் கைதிகளிடம் கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 May 2022 1:09 PM GMT (Updated: 14 May 2022 1:09 PM GMT)

கோர்ட்டு வளாகத்தில் கைதிகளிடம் கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து நேற்று 15 விசாரணை கைதிகளை அம்பத்தூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அய்யாவு தலைமையிலான போலீசார் வாகனத்தில் அழைத்து வந்தனர்.

அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் வாகனத்தில் ஏற்ற வந்தபோது, வாகனத்தின் அருகே சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த நபர் அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 22) என்பதும், விசாரணை கைதிகளுக்கு கஞ்சா கொடுக்க வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 15 கிராம் அளவிலான 4 பொட்டலங்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story