விளையாட்டு பயிற்சியாளர்கள் படிப்பு முடித்தவர்களுக்கு பணி அமைச்சர் மெய்யநாதன் தகவல்


விளையாட்டு பயிற்சியாளர்கள் படிப்பு முடித்தவர்களுக்கு பணி அமைச்சர் மெய்யநாதன் தகவல்
x
தினத்தந்தி 14 May 2022 6:57 PM GMT (Updated: 14 May 2022 6:57 PM GMT)

விளையாட்டு பயிற்சியாளர்கள் படிப்பு முடித்தவர்களுக்கு பணி வழங்கப்படும்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை காமராஜபுரத்தில் 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதில் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (அதாவது நேற்று) போடப்பட்டுள்ளது. உலக மகளிர் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனைகள் கலந்து கொள்வார்களா? என்பது அந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் விளையாட்டு சங்கங்கள் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. 4 சங்கங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்தது தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் விளையாட்டு பயிற்சியாளர்கள் படிப்பு முடித்து வேறு வேலைக்கு சென்று விட்டனர். அவர்களை ஒன்றிணைத்து தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விளையாட்டு அரங்கில் அனைத்து விளையாட்டிற்கும் பயிற்சியாளர்களாக 3 மாத காலத்திற்குள் நியமிக்கப்பட உள்ளனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளேன். முதல்-அமைச்சர் இதற்கான அறிவிப்பை விரைவில் அறிவிப்பார்’’ என்றார்.

Next Story