காதலி பேசாததால் வாலிபர் தற்கொலை


காதலி பேசாததால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 17 May 2022 6:24 PM GMT (Updated: 17 May 2022 6:24 PM GMT)

திட்டக்குடி அருகே காதலி தன்னுடன் பேசாததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அடுத்துள்ள கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் செல்லபாண்டியன் (வயது 23). பிளஸ்-1 படித்த இவர்,  வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். தற்போது அவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார்.

தூக்கில் தொங்கினார்

நேற்று இவர் வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர் வேலை பார்க்கும் ஷோரூமின் மேலாளர், செல்லபாண்டியனுடன் வேலை செய்யும் பெண்ணாடத்தை சேர்ந்த ஒருவருக்கு போன் செய்து, அவரது வீட்டுக்கு சென்று பார்த்து வரும்படி கூறியுள்ளார். 
 அதன்பேரில் அவரும் வீட்டில் சென்று பார்த்த போது, அங்கு கதவு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் செல்லபாண்டியனின் செருப்பு மட்டும் வெளியே கிடந்தது. 
இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார். அங்கு சேலையால் செல்லபாண்டியன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.

காதலி பேசவில்லை

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த ஆவினங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று,  பிரேதத்தை கைப்பற்றி  பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
போலீசாரின் விசாரணையில், செல்லபாண்டியன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதில் காதலி கடந்த 3 மாதமாக அவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்து இருந்த செல்லப்பாண்டியன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
 இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து , அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story