காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கினால் மட்டுமே மேகதாது அணை கட்டமுடியும்-ஆணைய தலைவர் மசூத் உசேன்


காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கினால் மட்டுமே மேகதாது அணை கட்டமுடியும்-ஆணைய தலைவர் மசூத் உசேன்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:05 AM GMT (Updated: 3 Dec 2018 10:05 AM GMT)

காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கினால் தான் மேகதாது அணை கட்டமுடியும் என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறினார்.

புதுடெல்லி

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது  கூட்டம் இன்று  டெல்லியில் நடைபெற்றது .  ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.  

கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் அனைத்து  உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம். காவிரி ஆணைய அடுத்த கூட்டம் ஜனவரியில் நடைபெறும். 

இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக இருந்தது. சில விஷயங்களில் முடிவுகளை எடுத்துள்ளோம். 

இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது; காவிரி படுகை பகுதிகள் நல்ல மழை பெற்றிருக்கின்றன 

மேகதாது குறித்த அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம்  அனுமதி வழங்கினால் தான் மேகதாது அணை கட்டமுடியும் .மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை .மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்புகளை பதிவு செய்து உள்ளது.அவற்றை கவனத்தில் கொள்வோம்.அணை திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கும் 

மத்திய நீர் வள ஆணையம் அதன் அதிகார வரம்பிற்குட்பட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story