மேகதாது அணை விவகாரம்: 7-ம் தேதி நிபுணர் குழுவுடன் ஆய்வு கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே.சிவகுமார்


மேகதாது அணை விவகாரம்: 7-ம் தேதி நிபுணர் குழுவுடன் ஆய்வு கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே.சிவகுமார்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:23 PM GMT (Updated: 3 Dec 2018 3:23 PM GMT)

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது.இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 22-ந் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருக்கும் முதல்-மந்திரி குமாரசாமி, இது தொடர்பான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசு, திறக்கும் தண்ணீரையும் தடுப்பதற்காக புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். மேலும் இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

இத்தகைய பரபரப்பான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் நடைபெற்றது. ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறியதாவது:

மத்திய நீர்வள ஆணையம், கர்நாடக அரசுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்தது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரித்ததும், அந்த அறிக்கை காவிரி மேலாண்மை ஆணையத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
பரிசீலனையின் போது தமிழகத்தின் எதிர்ப்பு கவனத்தில் கொள்ளப்படும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் ஜனவரியில் நடைபெறும் என தெரிவித்தார்.

இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில், கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே.சிவகுமார் செய்தியார்களிடம் கூறுகையில்,

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு சாத்தியக்கூறு அறிக்கை கேட்டுள்ளது. 7-ம் தேதி நிபுணர் குழுவுடன் மேகதாதுவில் அணை கட்டும் பகுதி, நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்கிறோம். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு ரூ.5 கோடி செலவில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

வனத்துறை அதிகாரிகள், அணை கட்டும் நிபுணர்கள், நிதித்துறை அதிகாரிகளும் வர உள்ளனர்.  இதன் பின், சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சிக்கு சென்று, அணையின் இறுதி பாயிண்ட் அமைப்பதற்கு ஆய்வு செய்யவுள்ளோம். இதன் பின், கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் தங்கவுள்ளோம்.

அணை கட்டுவதால், 95 சதவீதம் தமிழகத்துக்கு வசதியாக இருக்கும். இந்த அணை நீரில், ஒரு ஏக்கர் கூட விவசாயத்துக்கும் பயன்படுத்த மாட்டோம். இது பற்றி, தமிழகத்துக்கு விளக்க வேண்டும். 64 டி.எம்.சி., நீர் சேமிக்கும் அளவுக்கு, முதல்கட்ட அறிக்கை தயாரித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story