பச்சை மிளகாய்க்கும் காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி - பிரதமர் மோடி


பச்சை மிளகாய்க்கும் காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 Dec 2018 11:23 AM GMT (Updated: 4 Dec 2018 11:23 AM GMT)

பச்சை மிளகாய்க்கும், காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள பல மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்து பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தார். குருநானக் தேவுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை, சீக்கிய மதத்தினரின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிக்கவில்லை.

அதனால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் செய்த இந்த தவறுக்கு தற்போது புதிய பாதையை அமைத்து நான் பரிகாரம் தேட வேண்டியுள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை உங்கள் தீர்ப்புக்கே நான் விட்டு விடுகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் தீராத அதிகாரப் பேராசையால், தவறுகளால் இந்த நாடு ஏராளமான விலை கொடுத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை வகுத்தவர்கள் நாட்டை ஆள வேண்டும் என்கிற வேகத்தோடு இருந்தார்கள். இந்தியா பிரிக்கப்பட்டபோது ஏராளமான தவறுகளை காங்கிரஸ் கட்சி செய்ததால்தான், இன்று கர்தார்பூரை பாகிஸ்தானிடம் இழந்திருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஏராளமான போர்களில் ஈடுபட்டு அதில் வென்றுள்ளது. ஆனால் கர்தார்பூர் சாஹிப்பில் சீக்கியர்கள் அமைதியாகச் சென்று வழிபாடு நடத்த எந்தவிதமான ஏற்பாடும் இதுவரை செய்யவில்லை.

காங்கிரஸ் கட்சி ஏன் இந்த தவறுகளையும், அநீதிகளையும் இழைத்தது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் எல்லாம் என்னுடைய ஆட்சியில் சரி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த பாஜகவுக்கு வாக்களியுங்கள்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்திகளாக எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல் என்ற செய்திகள்தான் வந்து கொண்டிருந்தன. இப்போது கடந்த ஐந்தாண்டுகளாக இதுபோன்ற செய்திகளை நீங்கள் பார்த்ததுண்டா?

காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என எங்கள் அரசு நினைக்கிறது. ஆனால், பச்சை மிளகாய்க்கும் காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி.

காய்ந்த மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கிறது என்றால், பின்னர் ஏன் விவசாயிகள் பச்சை மிளகாயை பயிரிட வேண்டும். காய்ந்த மிளகாயையே பயிரிட வேண்டியதுதானே? என்று அவர் கேட்பார் என்றும் மோடி குறிப்பிட்டார்.

Next Story