கொல்கத்தா சி.பி.ஐ அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு


கொல்கத்தா சி.பி.ஐ அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு
x
தினத்தந்தி 3 Feb 2019 5:11 PM GMT (Updated: 3 Feb 2019 5:11 PM GMT)

கொல்கத்தா சி.பி.ஐ அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Kolkatta

கொல்கத்தா,

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் இன்று அவரது இல்லத்துக்கு வந்தனர். ஆனால், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராஜீவ் குமார் இல்லத்துக்கு விரைந்த மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கொல்கத்தா டிஜிபி மற்றும் மேயர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மேற்கு வங்காளத்தில் மோடி அரசு அராஜகத்தை பரப்புகிறது என குற்றம் சாட்டினார். மேலும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டை நடத்தியதற்காக அவர்கள் வலுக்கட்டாயமாக மேற்கு வங்காளம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பிரதமர் நேற்று அச்சுறுத்தும் வகையில் பேசியதை நீங்கள் பார்த்தீர்கள். இப்போதும் சொல்வேன் ராஜீவ் குமார் உலகின் தலைசிறந்தவர். எனது படைக்கு பாதுகாப்பளிப்பது எனது கடமை என்பதை நான் பெருமையாக சொல்வேன். போதிய ஆவணம் இல்லாமல் கொல்கத்தா காவல்துறை தலைவர் இல்லத்துக்கு வருகிறீர்கள்.நான் எனது படையுடன் துணை நிற்பேன். அவர்களுக்கு மரியாதை அளிக்கிறேன்.இன்று நான் மிகவும் வருத்தமாக உள்ளேன். கூட்டாட்சி அமைப்பை அழிப்பது என்பது இதுதான். கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மெட்ரோ சேனல் அருகே நான் தர்னாவில் ஈடுபடவுள்ளேன். நாளை சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெறும். அங்கு நான் ஆலோசனை நடத்தவுள்ளேன். இந்த தர்ணா சத்தியாகிரகம் ஆகும் என்று கூறினார்.

பின்னர் சிபிஐ விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவை துவக்கினார். தர்ணாவில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கொல்கத்தா சி.பி.ஐ அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story