பாகிஸ்தானில் இருந்த போது மனரீதியாக அபிநந்தன் துன்புறுத்தப்பட்டார்- தகவல்


பாகிஸ்தானில் இருந்த போது மனரீதியாக அபிநந்தன் துன்புறுத்தப்பட்டார்- தகவல்
x
தினத்தந்தி 3 March 2019 7:10 AM IST (Updated: 3 March 2019 7:10 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் இருந்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அபிநந்தன் வாக்குமூலம் அளித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் தரை இறங்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், அந்த நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார்.

ஜெனீவா ஒப்பந்தத்தின்படியும், உலக நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தும், அவரை நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.

இரவோடு இரவாக, விமானப்படை விமானம் மூலம் அபிநந்தன் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார். உடனடியாக, டெல்லியில் உள்ள விமானப்படை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அபிநந்தனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரது வலது கண் வீங்கி இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருந்ததால், அவரை சகஜநிலைக்கு கொண்டுவரும் பணியும் நடந்தது.

பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் உடலில் ஏதேனும் ஊசி மருந்து செலுத்தப்பட்டதா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது நடமாட்டத்தை வைத்து இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கத்தில், அவரது உடலில் உளவு கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்றும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

நேற்று காலை, அபிநந்தனை அவருடைய குடும்பத்தினர் சந்தித்தனர். விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோயா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சந்தித்தனர்.

பின்னர், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், அபிநந்தனை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானில், தான் 60 மணி நேரம் இருந்தபோது நடந்த சம்பவங்களை நிர்மலா சீதாராமனிடம் அபிநந்தன் விவரித்தார்.

உங்களுடைய துணிச்சல் மற்றும் மனஉறுதியை பார்த்து ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.

டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு கூலிங் டவுன் சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர், அது தொடர்பான விவரங்களை இந்திய அரசுக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.

 அபிநந்தனின் மனதையும், உடல்நலத்தையும் பேண கூலிங் டவுன் சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூலிங் டவுன் சிகிச்சை என்பது மனதையும், மன நலத்தையும் பேணுவதற்காக அளிக்கப்படும் சிகிச்சையாகும்.வழக்கமானதாக கருதப்படும் இந்த சிகிச்சை விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்படும். அபிநந்தனுக்கு அளிக்கப்பட்ட இந்த சிகிச்சையில் அவர் முன்னேற்றம் அடைந்தாரா..?அவரது உடல் மற்றும் மனநிலை எவ்வாறு உள்ளது என்ற விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். அதனை தொடர்ந்து அவருக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளப்படும.மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் வசம் இருந்தபோது அவர் மனரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அபிநந்தன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.தம்மை உடல்ரீதியாக பாகிஸ்தான் துன்புறுத்தவில்லை என்று கூறியுள்ளார். அவருக்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டபோது இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதனால், தொடர்ச்சியாக நாளையும் அபிநந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது. இந்தியா தொடர்பான முக்கிய ஆவணங்களை அவர் பாகிஸ்தானுக்கு கொடுக்கவில்லை, இதன் காரணமாகவே மன அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது என ஏ என் ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.


Next Story