புல்வாமா தாக்குதல்: உதவி செய்த பயங்கரவாதி அடையாளம் தெரிந்தது - வாகனமும், வெடிபொருளும் ஏற்பாடு செய்து கொடுத்தது அம்பலம்


புல்வாமா தாக்குதல்: உதவி செய்த பயங்கரவாதி அடையாளம் தெரிந்தது - வாகனமும், வெடிபொருளும் ஏற்பாடு செய்து கொடுத்தது அம்பலம்
x
தினத்தந்தி 10 March 2019 7:45 PM GMT (Updated: 10 March 2019 7:07 PM GMT)

காஷ்மீர் தாக்குதலுக்கு உதவி செய்த பயங்கரவாதி ஒரு எலெக்ட்ரீசியன் என்பது அதிகாரிகளின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வுப்பிரிவு உள்பட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. குறிப்பாக இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள், அதற்கு உதவி செய்தவர்கள் என அனைவரின் விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இதன் பயனாக, இந்த காட்டுமிராண்டித்தனமான செயலின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் முக்கியமாக, மேற்படி தாக்குதலுக்கு உதவி செய்த பயங்கரவாதியை அதிகாரிகள் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

அதன்படி புல்வாமா மாவட்டத்தின் மிர் மொகல்லா பகுதியை சேர்ந்த முதாசிர் அகமது கான் என்கிற முகமது பாய் (வயது 23) என்ற எலெக்ட்ரீசியனே இந்த தாக்குதலுக்கு தேவையான உதவிகளை செய்திருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளின் பட்டியலில் அதிக பிரபலம் இல்லாத இவர் பட்டப்படிப்பை முடித்து ஐ.டி.ஐ.யில் எலெக்ட்ரீஷியன் பயிற்சியையும் முடித்துள்ளார்.

இவர்தான் புல்வாமா தாக்குதலுக்கு தேவையான வாகனம் மற்றும் வெடிபொருளை ஏற்பாடு செய்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதற்காக மேற்படி தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அடில் அகமது தார், தொடர்ந்து இவருடன் தொடர்பில் இருந்துள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாதி முதாசிர் அகமது கான் கடந்த 2017-ம் ஆண்டுவாக்கில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் இணைந்திருக்கிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த பயங்கரவாத இயக்கத்தை மறுசீரமைத்த நூர் முகமது தந்திரியின் மரணத்துக்குப்பின் கடந்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதி வீட்டை விட்டு மாயமாகி உள்ளார்.

சஞ்சுவான் ராணுவ முகாம், லெத்போரா சி.ஆர்.பி.எப். முகாம்கள் மீது ஏற்கனவே நடந்த தாக்குதல்களில் இவரது பங்களிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில், புல்வாமா தாக்குதலிலும் இவரே முக்கிய பங்காற்றி இருப்பது பாதுகாப்பு படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பூஞ்ச் மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றியது. இந்த மாவட்டத்தின் மெந்தர் செக்டாரில் உள்ள பல்னோய், மங்கோட் பகுதிகளிலும், கிருஷ்ணகாதி செக்டார் பகுதிகளிலும் அதிகாலை 4.30 மணியளவில் பாகிஸ்தான் வீரர்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கினர்.

இதற்கு இந்திய வீரர்களும் கடுமையான பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே சுமார் 3 மணி நேரம் தாக்குதல் நீடித்தது. இந்த சம்பவத்தில் எல்லையோரத்தில் அமைந்துள்ள வீடு ஒன்று சேதமடைந்தது. அங்கு வசித்து வரும் மக்கள் ஏற்கனவே பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

Next Story