ராஜஸ்தானில் ஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் உடைகள் சேகரிப்பு - அரச பரம்பரையை சேர்ந்தவரின் கின்னஸ் சாதனை


ராஜஸ்தானில் ஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் உடைகள் சேகரிப்பு - அரச பரம்பரையை சேர்ந்தவரின் கின்னஸ் சாதனை
x
தினத்தந்தி 11 March 2019 7:00 PM GMT (Updated: 11 March 2019 6:33 PM GMT)

ராஜஸ்தானில் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவர், ஏழைகளுக்கு வழங்க 3 லட்சம் உடைகள் சேகரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

உதய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் லக்ஷ்யராஜ் சிங் மேவர். ராஜ்புத் மன்னர் பரம்பரையை சேர்ந்த இவர் ஏழைகளுக்கு வழங்குவதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து உடைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். ‘வஸ்திரதான்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த பிரசாரத்தை 120 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் சுமார் 30 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரை கொண்டு சென்றார்.

மேவரின் இந்த செயலால் ஈர்க்கப்பட்ட பலரும், அவருக்காக ஏராளமான உடைகளை தானமாக அளித்தனர். இவ்வாறு அவர் 3 லட்சத்து 29 ஆயிரத்து 250 ஆடைகள் சேகரித்தார். பின்னர் அவை தேவைப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

லக்ஷ்யராஜ் மேவரின் இந்த சாதனை நடவடிக்கை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்று உள்ளது. அவரது இந்த சாதனையை பாராட்டி நேற்று முன்தினம் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒரு புது முயற்சியாக இந்த திட்டத்தை தொடங்கியதாகவும், இதன் மூலம் இளம் மாணவ–மாணவிகளின் பரந்த மனதை கண்டுகொள்ள முடிந்ததாகவும் மேவர் கூறியுள்ளார்.


Next Story