தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல’ பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்


தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல’ பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்
x
தினத்தந்தி 12 March 2019 1:44 AM GMT (Updated: 12 March 2019 1:44 AM GMT)

தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல’ என பாரதீய ஜனதாவை சிவசேனா சாடியுள்ளது.

மும்பை, 

புலவாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. 

இந்த தாக்குதலில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த தாக்குதலின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. பா.ஜனதா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இதுகுறித்து பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயரை பயன்படுத்தி சிலர் வாக்கு கேட்பது ராணுவத்தினரின் தியாகத்தை அரசியலாக்கும் செயலாகும். எதிர்க்கட்சிகளை தேச விரோதி என்று அழைப்பதும் முறையாகாது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தேசபக்தி என்பது எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் சொந்தமானது அல்ல.

புலவாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்ட பதிலடி தாக்குதல் ராணுவத்தின் கடமை. ஆனால் அரசியல்வாதிகள் அதற்கு உரிமை கோரி வருகிறார்கள். ராணுவத்தின் வெற்றியை தங்களின் வெற்றியாக நினைத்து சிலர் பதாகை வைத்தும், சுவரொட்டிகள் ஒட்டியும் விளம்பரம் தேடுகிறார்கள். இது ராணுவத்துக்கு கிடைத்த வெற்றி என அவர்கள் நினைக்கவில்லை.

பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் ராணுவ உடை அணிந்து பிரசாரம் செய்கிறார்கள். இதனால் தான் அரசியல் லாபத்துக்காக இந்த தாக்குதலை மத்திய அரசு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதேநேரத்தில் புலவாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவதும், வீரர்களின் வீரத்தை சந்தேகிப்பதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story