கேரள சிறுவனுக்கு அபூர்வ வைரஸ் நோய் - நிலையை ஆராய மத்திய குழு விரைவு


கேரள சிறுவனுக்கு அபூர்வ வைரஸ் நோய் - நிலையை ஆராய மத்திய குழு விரைவு
x
தினத்தந்தி 14 March 2019 7:30 PM GMT (Updated: 14 March 2019 7:00 PM GMT)

கேரளாவில் சிறுவன் ஒருவனுக்கு அபூர்வ வைரஸ் நோய் தாக்கி உள்ளது. அந்த சிறுவனின் நிலையை ஆராய மத்திய குழு விரைந்துள்ளது.

புதுடெல்லி,

வட அமெரிக்காவில் பரவி வந்த ஒரு அபூர்வ வைரஸ் நோய் ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ என அழைக்கப்படுகிறது. இது நோய் தொற்று உடைய கொசுக்கள் கடித்து மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும். இந்த நோய் தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, குமட்டல், வாந்தி, தோல் அழற்சி, வீக்கம், நிணநீர் சுரப்பிகள் வீக்கம் ஆகியவை ஏற்படும்.

இந்த நோய் கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவனை தாக்கி உள்ளது. அவன் தற்போது கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. நிலைமையை நேரில் ஆராய்வதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 4 பேரை கொண்ட குழுவை கேரளாவுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கியுள்ள நிலையில், நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது, கேரளாவில் இந்த நோயை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட் டுள்ளது.


Next Story