கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி இல்லை - பின்னணி என்ன?


கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டி இல்லை - பின்னணி என்ன?
x
தினத்தந்தி 16 March 2019 9:41 PM GMT (Updated: 16 March 2019 9:41 PM GMT)

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போட்டியிடாதது குறித்த பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி ஆட்சி நடக்கிற கேரளாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மக்களின் மனநிலையும், அந்த கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அங்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடப்போவதில்லை என தெரியவந்துள்ளது.

இவர்களின் பெயர்களை மேலிடத்துக்கு வேட்பாளர்கள் பரிசீலனைக்காக அனுப்பப்போவதில்லை என பரிந்துரை குழு முடிவு செய்துள்ளதாக டெல்லியில் முல்லப்பள்ளி ராமச்சந்திரனும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதலாவும் நேற்று தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உம்மன் சாண்டி மாநில அரசியலில்தான் இருக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆலப்புழா தொகுதியில் இருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கே.சி.வேணுகோபால், இந்த முறை தேசிய அரசியல் பணிகள் காரணமாக போட்டியிட மாட்டேன் என ஏற்கனவே அறிவித்து விட்டது நினைவுகூரத்தக்கது.


Next Story