“நானும் காவலாளிதான்...” பிரதமர் மோடியை தொடர்ந்து பெயரை மாற்றும் பா.ஜனதா தலைவர்கள்


“நானும் காவலாளிதான்...” பிரதமர் மோடியை தொடர்ந்து பெயரை மாற்றும் பா.ஜனதா தலைவர்கள்
x
தினத்தந்தி 17 March 2019 9:56 AM GMT (Updated: 18 March 2019 12:07 AM GMT)

பிரதமர் மோடியை தொடர்ந்து நானும் காவலாளிதான் என பா.ஜனதா தலைவர்கள் தங்களுடைய பெயரை மாற்றி வருகின்றனர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு மத்தியில் காங்கிரஸ் சிக்கியப்போது இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். யாரையும் ஊழல் செய்யவும் விடமாட்டேன். நானும் ஊழல் செய்ய மாட்டேன். இந்த தேசத்தின் காவலாளியாக இருப்பேன் என்றார். பிரதமர் மோடி காவலாளியாக இருப்பேன் என்று கூறியதை மையப்படுத்தி அவ்வப்போது காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. 

ரபேல் போர் ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் இந்த தேசத்தின் காவலாளியே ஒரு திருடன் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. காவலாளி என்பதை திருடன் என்று காங்கிரஸ் அதித குற்றச்சாட்டை முன்வைத்து டுவிட்டரிலும் பிரசாரம் மேற்கொண்டது.

இப்போது காங்கிரசின் இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் டுவிட்டரில் பிரசாரம் ஒன்றை 2019 தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். காவலாளி என்ற பெயரை பொதுமையாக்கிய பிரதமர் மோடி இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உங்களுடைய பாதுகாவலன்  உறுதியுடன் நாட்டுக்கு சேவையாற்றி வருகிறேன். ஆனால், நான் தனி ஒருவன் கிடையாது. ஊழல் சமூக கொடுமைக்கு எதிராக போராடும் அனைவருமே காவலாளிதான். இந்தியாவின் வளர்ச்சிக்காக பணியாற்றும் அனைவருமே காவலர்கள்தான். இன்று ஒவ்வொரு இந்தியரும் நானும்கூட காவலாளிதான் என்று கூறுகிறார்கள் என பதிவிட்டார். 

பா.ஜனதா பிரசாரத்திற்கு வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார். வீடியோவில், ஊழலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். லஞ்சம் பெறவும் மாட்டேன். ஏனென்றால் நான் `காவலன்’ என்று  பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிடுவது இடம் பெற்றுள்ளது.  முடிவில், நானும் தேசத்தின் பாதுகாவலனே என்ற உறுதிமொழி ஏற்று ஹேஷ்டேக்கை டிவீட் செய்யும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து #MainBhiChowkidar ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பா.ஜனதாவினர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியை தொடர்ந்து பிற மத்திய அமைச்சர்களும், பா.ஜனதா தலைவர்களும் தங்களுடைய பெயரை டுவிட்டரில் நானும் காவலாளிதான் என மாற்றி வருகிறார்கள்.

டுவிட்டரில் தன்னுடைய பெயரை காவலாளி பியூஷ் கோயல் என மாற்றியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், . #மேன்பிசவுகிதார், #சவுகிதார்பிர்சே  என ஹேஷ்டேக்குகளுடன் “நம்முடைய நாட்டின் காவலாளிகள், பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொண்டு, ஊழலில்லாத பொருளாதாரத்தை கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளில் ஊழலும், கறுப்புப்பணமும் நம்மை பாதித்துவிட்டது. இதை ஒழித்து எதிர்காலத்தை வளப்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

இதேபோன்று பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள தகவலில், “நடைமுறை வாழ்க்கையிலும், ஒழுக்கத்திலும் யார் ஒருவர் கறைபடியாமல் இருக்கிறாரோ அவரே காவலாளி. அனைவரும் மனதளவில் காவலாளியாக இருப்போம் " என குறிப்பிட்டுள்ளார். மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் தன்னுடைய பெயரை காவலாளி என மாற்றியுள்ளார். #மேன்பிசவுகிதார் பிரசாரத்தில் என்னை இணைத்துக் கொள்வதில் மிகவும்  பெருமை கொள்கிறேன்... பிரதமர் மோடி தலைமையில், ஊழலை அகற்ற, புதிய இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க, கடைக்கோடி மனிதனையும் வளர்ச்சியடைய செய்ய,  நமது நாட்டை வலுப்படுத்த மிகவும் கடினமாக பணியாற்றுவோம் என்று மீண்டும் நாம் உறுதிமொழி ஏற்போம் என பதிவிட்டுள்ளார் பட்னாவிஸ். 

Next Story