தேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மாயாவதி முறையீடு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு


தேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட  தடைக்கு எதிராக மாயாவதி முறையீடு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
x
தினத்தந்தி 16 April 2019 6:40 AM GMT (Updated: 16 April 2019 6:40 AM GMT)

தேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மாயாவதி முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

புதுடெல்லி,

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 11-ந்தேதி நடந்தது. தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் மும்முரமாக பிரசாரம் நடைபெற்று வருகிறது. பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரியும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி பிரசாரம் செய்து வருகிறார்.

மாயாவதி கடந்த 7-ந்தேதி சகரன்பூர் என்ற இடத்தில் பிரசாரம் செய்யும் போது முஸ்லிம்கள் தங்கள் அணிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மீரட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு பதில் அளிக்கும் வகையில் மத ரீதியாக சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு முன்பு அவர் ஒரு கூட்டத்தில் பேசுகையில் இந்திய ராணுவத்தை மோடியின் படை என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு மாயாவதியும், யோகி ஆதித்யநாத்தும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 72 மணி நேரம் (3 நாட்கள்) தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கவும் தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தர விட்டது. அதேபோல்,  இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு (2 நாட்கள்) மாயாவதிக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

பிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை மாயாவதி நாடினார். ஆனால், மாயாவதி கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,  வெறுப்புணர்வை தூண்டும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு தடை விதிக்கும் ஆணையத்தின் முடிவு ஏற்கப்படுவதாக தெரிவித்தது. 


Next Story