புல்வாமா தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டம்- உளவுத்துறை எச்சரிக்கை


புல்வாமா தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதலை நடத்த  தீவிரவாதிகள் திட்டம்- உளவுத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 April 2019 5:36 AM GMT (Updated: 20 April 2019 8:23 AM GMT)

புல்வாமா தாக்குதல் போன்று மற்றுமொரு தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புதுடெல்லி

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த  தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது.

புல்வாமா போன்ற மேலும் ஒரு தாக்குதலை நடத்த  தீவிரவாதிகள்  பாராளுமன்ற தேர்தலின் போது திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டு உள்ளது.  இதற்கு   முகலாய பேரரசர்கள் பெயரிட்டு உள்ளனர் என உளவுத்துறையினர் தெரிவித்து உள்ளனர். 

இது குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள்  மேலும் ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்கு  மோட்டார் சைக்கிளை பயன்படுத்த  உள்ளனர். மோட்டார் சைக்கிளின் இருபுறமும் வெடி பொருட்களுடன்  சென்று தாக்குதல் நடத்த உள்ளனர். இரு சக்கர வாகனங்கள் எந்தவொரு இலக்கையும் அடைவது மிகவும்  எளிதானது. வாக்குப்பதிவு நாட்களில் அல்லது பிரசாரத்தின் போது கூட  இது போன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.

உளவுத்துறை அமைப்புகள் பாதுகாப்பு படைகளுடன் தீவிரவாத  எச்சரிக்கையை பகிர்ந்து கொண்டுள்ளன. எந்தவித அசம்பாவித  சம்பவத்தையும் தவிர்ப்பதற்காக கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்துமாறு கேட்டு கொண்டு உள்ளது.

Next Story