சுப்ரீம் கோர்ட்டில் ரபேல் மறுஆய்வு மனுக்கள் மீது 10-ந்தேதி விசாரணை


சுப்ரீம் கோர்ட்டில் ரபேல் மறுஆய்வு மனுக்கள் மீது 10-ந்தேதி விசாரணை
x
தினத்தந்தி 6 May 2019 10:15 PM GMT (Updated: 6 May 2019 8:42 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் ரபேல் மறுஆய்வு மனுக்கள் மீது 10-ந்தேதி விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

ரபேல் தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 10-ந்தேதி விசாரணை நடைபெறும். அன்றே ராகுல் காந்திக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கிலும் விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை என்றும் கூறி, அந்த வழக்கை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் 14-ந்தேதி தீர்ப்பு கூறியது.

ஆனால் அடுத்த சில நாட்களில் ரபேல் முறைகேடு தொடர்பான சில ஆவணங்கள், ஊடகங்களில் கசிந்ததால், அந்த ஆவணங்களை ஆதாரங்களாக கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு டிசம்பர் 14-ந்தேதி வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மறுஆய்வு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த மனுக்கள் கடந்த மாதம் 30-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் பதில் மனுவை மே 4-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து 6-ந்தேதிக்கு (நேற்று) விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் கடந்த சனிக்கிழமையன்று புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிரமாண பத்திரத்தில் இந்த வழக்கில் மறுஆய்வுக்கு முகாந்திரம் ஏதுமில்லை என்றும் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறும் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்ட நீதிபதிகள், இந்த வழக்குடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். மறுஆய்வு மனுக்கள் மற்றும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஆகிய இரண்டையும் ஒன்றாக விசாரிப்பதாக முன்பு உத்தரவு பிறப்பித்த நிலையில், இப்போது எப்படி தனித்தனி விசாரணைக்கு தேதிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன? என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

இதனைத்தொடர்ந்து இந்த இரு வழக்குகளையும் வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

உடனே மனுதாரர்களில் ஒருவரான வக்கீல் பிரசாந்த் பூஷன், தங்கள் தரப்பில் வாதிடுவதற்கு பிற்பகல் 3 மணி வரையிலாவது அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்,

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைமை நீதிபதி, இந்த அமர்வின் மற்றொரு நீதிபதி விசாரிக்க வேண்டிய பல வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளதால் நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம் என்று கூறினார். தொடர்ந்து இந்த இரு வழக்குகளும் வருகிற 10-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அனைத்து தரப்பினரும் அன்றே தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு மீது, அனைத்து தரப்பினரும் தங்கள் எதிர் பதில் மனுக்களை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story