மாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் - அருண் ஜெட்லி கருத்து


மாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் - அருண் ஜெட்லி கருத்து
x
தினத்தந்தி 13 May 2019 10:45 PM GMT (Updated: 13 May 2019 9:26 PM GMT)

மாயாவதி, பொது வாழ்க்கைக்கு தகுதி அற்றவர் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, அரசியல் ஆதாயத்துக்காக தன் மனைவியை கைவிட்டவர் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியிருந்தார். அதனால் அவருக்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சகோதரி மாயாவதி, பிரதமர் ஆவதில் உறுதியாக இருக்கிறார். அவரது ஆட்சிமுறை, நன்னெறி, பேச்சுத்திறன் ஆகியவை இதுவரை இல்லாத அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டன. மோடி பற்றிய அவரது தனிப்பட்ட தாக்குதல், அவர் பொது வாழ்க்கைக்கே தகுதியற்றவர் என்பதை வெளிக்காட்டி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் நடந்து முடிந்த 6 கட்ட தேர்தல்களில் மாயாவதி கட்சி வேட்பாளர்களும், அவரது கூட்டணி கட்சி வேட்பாளர்களும் தோல்வி முகத்தில் உள்ளனர். அதனால் அவர் அரசியல் மன அழுத்தத்தில் இருக்கிறார். அவர் பலவீனமாக உள்ளார். அவரது நினைவு மங்கிவிட்டது. இவையெல்லாம் அவரது அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.

அவருக்கு அரசியல் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. கண்ணியம், வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிப்பதுதான் அரசியல் ஊட்டச்சத்து சாப்பிடுவதற்கு சமம்.

கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்தினால், அரசியல் ஆரோக்கியம் மேம்படாது. அவர் தனது நினைவுகளை புதுப்பிக்க வேண்டும்.

மோடி, அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். ஆனால், மாயாவதி தலித்துகளுக்காக எதுவுமே செய்யவில்லை. வரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் கூச்சல் அதிகரிக்கும். தேர்தல் தோல்விக்கு பிறகு அது உச்சத்தை தொட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story