‘அமித்ஷா ஒரு பொய்யர்’ திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி


‘அமித்ஷா ஒரு பொய்யர்’ திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி
x
தினத்தந்தி 15 May 2019 9:54 AM GMT (Updated: 15 May 2019 9:54 AM GMT)

கொல்கத்தா வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம் என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு அக்கட்சி மறுப்பை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசார பேரணி நடத்தினார். அங்குள்ள கல்லூரி சாலையில் கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் அருகே பேரணி சென்று கொண்டிருந்த போது வன்முறை வெடித்தது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது.  பின்னர் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அங்கு அமைதி திரும்பியது.

இதுபற்றி அமித்ஷா கூறும்போது, ‘‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் என்னை தாக்க முயன்றனர். மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டிவிடுகிறார். ஆனாலும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன். விவேகானந்தர் இல்லத்துக்கு செல்ல நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை’’ என்றார். வன்முறை தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதாவினர் இடையே கடுமையான வார்த்தை போர் தொடர்கிறது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, மேற்கு வங்காளத்தில் வன்முறை தொடர்வதற்கு பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் உள்ளது. மம்தா பானர்ஜி பா.ஜனதாவை குற்றம் சாட்டுகிறார். நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன், திரிணாமுல் காங்கிரஸ் 42 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது. நாங்கள் தேசம் முழுவதும் போட்டியிடுகிறோம். நாங்கள் எல்லாப்பகுதியிலும் ஒவ்வொரு கட்சிகளுக்கு எதிராக போட்டியிடுகிறோம், அங்கெல்லாம் வன்முறை நேரிடவில்லை. திரிணாமுல் காங்கிரஸ்தான் வன்முறையில் ஈடுபடுகிறது. கொல்கத்தாவின் என்னுடைய பாதுகாப்பு வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, எனக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் என்னால் காயமின்றி உயிருடன் இங்கே வந்திருக்க முடியாது எனக் கூறியுள்ளார். 

தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையை உடைத்ததும் திரிணாமுல் காங்கிரசார்தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி, வன்முறை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார் அமித்ஷா.

அமித்ஷாவின் இக்குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. பா.ஜனதா தன்னுடைய செயல்பாட்டை நியாயம் எனக் கூறிக்கொள்ள முயற்சி செய்கிறது என்று அக்கட்சியின் எம்.பி. தெரிக் ஒ பிரையன் கூறியுள்ளார். பா.ஜனதாவினர்தான் வன்முறையில் ஈடுபட்டனர், வித்யாசாகர் சிலையை உடைத்தது பா.ஜனதாவினர்தான் என்பதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. வீடியோ உண்மையை விளக்குவதுடன், அமித்ஷா ஒரு பொய்யர் என்பதை நிரூபிக்கிறது என கூறியுள்ளார் பிரையன். 

மத்திய படைகளுக்கு எதிராக எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. மத்திய படையை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவிற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை கேட்டு வருகிறார்கள். பா.ஜனதாவிற்கு ஆதரவாக அவர்கள் பிரசாரம் செய்கிறார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே பேரணிக்கு ஆயுதங்களுடன் வருமாறு பா.ஜனதாவினருக்கு அழைப்பு விடுக்கும் வகையிலான வீடியோ மற்றும் வாட்ஸ் அப் செய்திகளையும் திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், போலீஸ் உடன் போராட ஆயுதங்களுடன் வாருங்கள் என வீடியோவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story