உ.பி.யில் மாறுபட்ட கூட்டணியால் இஸ்லாமிய வாக்காளர்கள் குழப்பம்


உ.பி.யில் மாறுபட்ட கூட்டணியால் இஸ்லாமிய வாக்காளர்கள் குழப்பம்
x
தினத்தந்தி 17 May 2019 1:00 PM GMT (Updated: 17 May 2019 1:00 PM GMT)

உ.பி.யில் அமைந்துள்ள மாறுபட்ட கூட்டணியால் இஸ்லாமிய வாக்காளர்கள் மத்தியில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது. தனித்து விடப்பட்ட காங்கிரசும் சிறு கட்சிகளை இணைத்து போட்டியிடுகிறது. மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜனதாவும் அங்கு தனியாக களமிறங்கியுள்ளது. இப்போது கிழக்கு உத்தரபிரதேசத்தில் அதிகமான இஸ்லாமியர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் அங்கு அமைந்துள்ள மாறுபட்ட கூட்டணியால் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் அல்லது சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு வாக்களிப்பதா என்ற குழப்பத்தில் உள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக இருக்கும் கோரக்பூர் பிராந்தியத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சிலர், பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், பாதுகாப்பின்மை உணர்வை கொண்டுள்ளனர். கோரக்பூரில் உள்ள மிகப்பெரிய மசூதியின் தலைவரான முப்தி முகமது வாலிவுல்லாக் பேசுகையில், எந்தகட்சிக்கு வாக்களிப்பது என்பதில் இஸ்லாமிய மக்களிடம் ஒருமித்த கருத்து கிடையாது. குறைந்த கல்வியறிவுள்ள இஸ்லாமியர்கள் மகா கூட்டணிக்கும் (எதிர்க்கட்சி கூட்டணி), படித்தவர்கள் தங்களுடைய புரிதலின்படியும் வாக்களிப்பார்கள் எனக் கூறியுள்ளார்.  

இஸ்லாமியர்களின் தேசியவாதத்தை பா.ஜனதா கேள்வி எழுப்புவதன் மூலம் துயரத்தை வெளிப்படுத்திய அவர், ஒருசில இஸ்லாமிய மதகுருமார்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்தனர். இந்த நாட்டில் இருந்தவர்கள்தான் இஸ்லாமிய மதத்தை தேர்வு செய்தனர். இந்தியாதான் எங்களுடைய நாடு எனவும் குறிப்பிட்டார். கோரக்பூரில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் இஸ்லாமியர்கள், இங்கு 12 தொகுதிகளில் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறும். 

யோகி ஆதித்யநாத் தலைமை பூசாரியாக இருந்த கோவில் பகுதியில் அதிகமான இஸ்லாமிய மக்களே உள்ளனர். ஆதித்யநாத் வாக்களித்த வாக்குச்சாவடியில் மொத்தம் 330 வாக்குகளில் 233 வாக்குகள் பா.ஜனதாவிற்கு சென்றது. இந்த வாக்குச்சாவடியில் பாதி வாக்காளர்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். சமூகத்தின் அச்சங்களைத் தவிர்க்க முயற்சி செய்யும் வகையில் ஆதித்யநாத் பேசுகையில், என்னுடைய அரசு பதவியேற்ற பின்னர் இரண்டு வருடங்களில் எந்தஒரு வன்முறை சம்பவங்களும் கிடையாது. மாநிலத்தின் பிற பகுதிகளைவிடவும் கோரக்பூரை இஸ்லாமியர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள். மாநிலத்தில் மத விழாக்கள் மிகவும்  நல்லிணக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இது மாநிலம் முழுவதும் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. யாராவது சட்டவிரோதமாக அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்தால் அதற்கான சட்ட விளைவுகளை எதிர்க்கொள்ள நேரிடும் எனக் கூறியுள்ளார். 

மகராஜ்காஞ் தொகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மொகத் அர்சாத் (பொலிட்டிக்கல் சைன்சில் பட்டம் பெற்றவர் ) பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு மேற்கொண்ட நல்ல பணிக்காக மேலும் ஒருவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளாக நான் ஓட்டுநர் பணியை மேற்கொள்கிறேன், வெளிநாட்டு பயணிகளையும் அழைத்து வருகிறேன். இப்போது பயணிக்க எளிதான சாலைகள் எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது நன்கு அறியப்பட்டவையாகும். கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதும் எல்லோருக்கும் பலனளிக்கும். 

ஆதித்யநாத் அரசில் கலவரங்கள் இல்லையென்றாலும் இஸ்லாமியர்கள் மத்தியில் பாதுகாப்பின்மை இருக்கத்தான் செய்கிறது. இந்து யுவா வாகினி அமைப்பை சேர்தவர்கள் இங்கு அமைதியின்மையை ஏற்படுத்தினார்கள். இப்போது யோகி ஆதித்யநாத் ஆட்சிக்குவந்த பின்னர் அமைதியாக உள்ளனர். நாங்கள் அமைதியை விரும்புகிறோம். இப்போது அது இருக்கிறது. இஸ்லாமியர்களுக்காக இப்பகுதியில் பா.ஜனதா அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இங்கு  கழிப்பறைகள், மின் இணைப்புகள், மற்ற வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை பாராட்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.  

மஹாராஜ்கஞ்ச் தொகுதியில்  தையல்காரரும், அப்பகுதியில் மதராஸா நடத்துபவருமான முகமது பிலால் பேசுகையில், பிரதமர் மோடிக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ரமலான் மாதத்தில் மின்வெட்டு காணப்படுவது இதுவரையில்லாதது. யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக எங்கள் கிராமத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து யாரும் மோடியை ஆதரிக்கவில்லை. பிரியங்கா காந்தி இங்கு வந்தபோது ஒரு பெரிய கூட்டம் இருந்தது. நாங்கள் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்வோம்”எனக் கூறியுள்ளார்.  மஹாராஜ்கஞ்ச் தொகுதிகளில் 15 சதவீத இஸ்லாமியர்கள் உள்ளனர்.

Next Story